Monday 19 October 2015

பாடல் - 79

பலன்: நல்ல சங்கம் (சத்சங்கம்) கிடைக்கும்

விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு, எமக்கு அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுத்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே?

பொருள்:

இப்பாடல் பாடும் போது, அன்னை பட்டருக்கு காட்சி கொடுத்து, தன் காதணி ஒன்றினை கழற்றி வானில் எரிந்து, தை அமாவாஸ்யை தினத்தன்று பூரண நிலவுலாவும் பௌர்ணமியாக ஒரு க்ஷணம் மாற்றி அனைவருக்கும் அவளின் மகிமையினையும், பட்டரின் பக்தியின் பெருமையினையும் உலகுக்கு காண்பித்தாள். நமக்கும் அவளின் காட்சி கிடைக்கட்டும்.

அபிராமியின் கண்களில் இயற்கையாகவே அருள் நிறைந்து இருக்கும். வேதம் சொன்னவாறு அவளை வழிபட தனக்கும் (பட்டருக்கும்) மனம் உண்டு. இவ்வாறு ஒரு வழி இருக்க, அதில் செல்லாமல், பழி, பாவம் சேரும் வழியில் சென்று, தீய செயல்கள் செய்து, மீள முடியாத நரகத்தினுள் தள்ளப்பட்டு துன்பப்படும் கயவர்களோடு எதற்காக சேர வேண்டும்? அன்னையின் துணையே சாலச்சிறந்தது.

பாடல் (ராகம்-மோகன கல்யாணி, தாளம் - ஆதி) கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment