Monday 7 September 2015

பாடல் - 59

பலன்: குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்கள் வளரும்

தஞ்சம் பிறிது இல்லை, ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார் , அடியார் பெற்ற பாலரையே

பொருள்:

ஒற்றைச்சிலை போன்ற அழகுடையவளும், கைகளில் கரும்பு வில் (இக்கு - கரும்பு), 5 மலர் அம்புகள் ஆகியவற்றை உடையவளுமான அன்னை அபிராமியே தஞ்சம் என்று தெரிந்தபின்னரும், அவளை எண்ணாது, பிற வழியில் நாம் செல்லினும், நம்மை அன்னை தண்டிக்க மாட்டாள். ஏனென்றால், உலகில் உள்ள சாமானிய பெண்களே, தங்கள் குழந்தைகள் தவறு செய்தால், தண்டிக்காமல் மன்னித்து விடுகிறார்கள். அப்போது அன்னை நிச்சியம் மன்னிப்பாள் அல்லவா?

இங்கே பெண்கள், மெல்லிய அடி உடையவர்கள், அதாவது, பஞ்சும் நாணும் வண்ணம் மெல்லிய நடை உள்ளவர்கள் என்று பட்டர் கூறியுள்ளார்.

"அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார் , அடியார் பெற்ற பாலரையே " -
  1. அறியார் - அறியாதவர் (பேதை பெண்கள் - அக்காலத்தில் பெண்கள் ஒன்றும் அறியாதவர்கள், இல்லத்தையும், கணவனையும், குழந்தைகளையும் தவிர மற்றொன்றையும் அறியாதவர்கள் என்று கொள்ள வேண்டும்) 
  2. எனினும் - ஆகினும், 
  3. பஞ்சு அஞ்சு மெல் அடியார் (மெல்லிய அடிகள் உடைய பெண்கள்), 
  4. அடியார் (அடிக்க மாட்டார்கள்).
  5. பெற்ற பாலரையே - பெற்ற பாலர்களை(குழந்தைகளை) 
வள்ளுவரும், திருக்குறளில் பெண்களை பற்றி கூறும் போது:
தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்

என்று கூறியுள்ளார். அதாவது, பெண் என்பவள், தன்னையும், தன்னை கொண்டவனையும் (கணவன், குடும்பம்),  தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை செய்து சொல்லை காத்து, சோர்வற்று சுறுசுறுப்பாக இருப்பவள் என்று பொருள் படும். சோர்விற்கு சோர்வு கொடுப்பதே பெண்ணிற்கு அழகு.

சதா சிவ பதிவ்ரதா, சதா சிவ குடும்பினி என்றே அம்பாளுக்கு இரு சிறப்பு பெயர்கள்  உண்டு.

பாடல் (ராகம் - சிம்மேந்திர மத்யமம், தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment