Saturday 25 April 2015

பாடல் - 26

பலன்: செல்வாக்கு, சொல்வாக்கு அருளும்

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம், கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின்தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே

பொருள்:
மணம் கமழ் கடம்ப மாலையினை கூந்தலில் அணிந்திருக்கும் ஆரணங்கு (அழகிய பெண்) அபிராமி. அவளை அவள் அடியவர்கள் மற்றும் 14 உலகினையும் முறையே படைத்து, காத்து, அழிக்கும் தொழில்கள் செய்யும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தேவர்களும் வணங்குகின்றனர். அத்தகைய அன்னையின் மணம் கமழ் திருவடிகளை எளியவனான என் நாவலிருந்து தோன்றிய பாடல்கள் அவற்றை நன்றாக வர்ணிக்கின்றன. இவ்வாறு எண்ணும்போது சிறிய நகை உண்டாகிறது. ஏனென்றால், நீ கொடுத்த வாக்கு சக்தியால், உன்னையே தொழுகிறேன். அதை பெரிதாக கருதி சொல்வதால்.

இப்படியே, ஆதி சங்கரர் தனது சௌந்தர்ய லஹரி 100-வது ஸ்லோகத்தில், வினயத்தோடு கூறியுள்ளார்.

பிரதீப-ஜ்வாலாபி: திவஸகர-நீராஜன-விதி:
ஸுதா-ஸூதே: சந்த்ரோ-பல-ஜல-லவை: அர்க்ய-ரசனா
ஸ்வகீயை: அம்போபி: ஸலில-நிதி-ஸௌஹித்யகரணம்
த்வதீயாபி: வாக்பி: தவ ஜனனி வாசாம் ஸ்துதி: இயம்

அதாவது, அன்னையை இப்படி 100 ஸ்லோகங்களால் தாம் துதித்தது, ஒளியின் பிதாவான சூரியனுக்கு கற்பூரத்தால் ஆரத்தி எடுப்பது போன்றது. சந்திரகாந்த கல்லிற்கு சந்திரனால் தான் குளிர்ச்சியே. அந்த சந்திரனுக்கு சந்திரகாந்த கல்லிலிருந்து வடியும் நீரை எடுத்து அர்க்யம் அளிப்பது போல் ஆகும். மேலும் சமுத்திரத்தில் இருந்து நீரை எடுத்து சமுத்திரத்திற்கே அபிஷேகம் செய்வது போல் ஆகும்.

நாம் ஒரு ஸ்லோகம் ஸ்வயமாக எழுதினாலும் நான் செய்தேன் நான் செய்தேன் என்று இன்றெல்லாம் copy-rights பதிவு செய்கிறோம். சங்கரர், அபிராமி பட்டர் போன்ற மகான்கள், உலக நலனுக்காக பல ஸ்தோத்திரங்கள் செய்தாலும், தான் எதுவும் செய்யவில்லை. எல்லாம் அம்பாளின் அருள் என்று இருக்கிறார்கள். அவர்கள் மகான்கள்.

பாடல் (ராகம் - மலையமாருதம், தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment