Friday 10 April 2015

பாடல் - 24

பலன்: நோய்கள் அகலும்

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புணைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவற்கு
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே,
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.

பொருள்:

இப்பாடல், இதற்கு முந்திய பாடல் இரண்டிலும், பட்டர், அபிராமியை தவிர வேறொருவரை வணங்கமாட்டேன் என்கிறார். வேண்டுவனவற்றை அளிக்கும் சிந்தாமணி அன்னை அபிராமி. "தரித்ராணாம் சிந்தாமணி குண நிகா" என்று சௌந்தர்ய லஹரி 3-வது ஸ்லோகத்தில் (அவித்யனாம்...) அன்னையின் பாத தூளி கேட்பவர்களுக்கு கேட்டதை அளிக்கும் சிந்தாமணி குவியல் என்று சங்கரர் கூறியுள்ளார். ஒரு சிந்தாமணி இருந்தாலே எல்லாவற்றையும் அளித்துவிடும். இங்கே அன்னையின் பாத தூளியே, சிந்தாமணி குவியல். அப்போ அன்னை எப்படிப்பட்டவள்?

  1. அன்னை மணி போல் உயர்ந்தவள். 
  2. அந்த மணியாகிய ரத்தினத்தின் ஒளி அவளே. 
  3. ஒளிர்கின்ற ரத்தினங்கள் ஒன்றாய் தொடுத்த அணிகலன் அவளே. 
  4. அணிகின்ற அந்த அணிகலனின் அழகும் அன்னையே. 
  5. அவளை அணுகாமல் ஒருவர் இருந்தால், அவர் பிணியால் பீடிக்கப்பட்டவர் ஆவார். அந்த பிணியும் அவளே. 
  6. அவர்கள் திருந்தி அன்னையை அணுகினால், அவருக்கு பிணியை களைந்து அறுத்துவிடுபவள் அன்னையே. அதனால் அந்த பிணிக்கு மருந்தும் அவளே.
  7. தேவர்களுக்கு அன்னையே சிறந்த பரிசாவாள். தேவேந்த்ரனுக்காக பல சமயங்களில் அருள் செய்துள்ளாள்.

இப்படிபட்டவளான அபிராமியின் தாமரை பாதங்களை விடுத்து வேறொன்றையும் பணிய மாட்டேன்.

பாடல் (ராகம்-ஜெயந்தஸ்ரீ, தாளம்-ஆதி) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment