Monday 23 March 2015

பாடல் - 21

பலன்: அம்பிகையை வழிபடாது நாத்திகமாய் இருந்த பாவம் தொலையும்.

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருண
சங்கலை செங்கை, சகலகலா மயில், தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்,
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே

பொருள்:

மங்கலை - சுமங்கலி - மங்கள வடிவினள்.

செங்கலசம் முலையாள் - செம்மையான கலசம் போன்ற முலைகளை உடையவள்.

மலையாள் - மலையரசன் ஈன்ற பெண்.

வருண சங்கலை செங்கை - சங்குகளால் ஆன வளையல்களை தன் சென்னிற கைகளில் அணிந்தவள்.

சகல கலா மயில் - அனைத்து கலைகளுக்கும் மயில் (அரசி)

தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் - துள்ளி
திரிந்து வரும் கங்கையையும் அதனால் உண்டாகும் நுரை அலையினயும் தன் சடையில் தங்க வைத்துக்கொள்ளும் சிவபெருமானின் மனையாள்

உடையாள் - என்றும் பக்தர்களுக்கு உடையவள்

பிங்கலை - மஞ்சள் வண்ணத்தினாள்.

நீலி - நீல நிறமுடையாள்

செய்யாள் - சிவந்த நிறமுடையாள்

வெளியாள் - இவ்வாறெல்லாம் விளங்குபவள்.

பசும் பெண்கொடியே - பசுமையான கொடி போன்றவள் - இதனால் தான் அம்பாளுக்கு அபர்ணா என்று பெயர். பர்ணா - இலை. அபர்ணா - இலையில்லாதது. அது ஒரு கொடி.

சிவன் கட்டமரம் - அசைவற்றவர். அம்பாள் - சக்தி - அவரை கொடி போல் சுற்றிக்கொண்டிருப்பவள். காய்ந்த கொடி இல்லை. அவள் பசுங்கொடி. இவர்கள் இருவரின் புதல்வர் - முருகன் - விசாகன். சாகை - கிளை. விசாகை - கிளை அற்றது. கிளை இல்லாத செடி. இதுவே சோமாஸ்கந்த வடிவம்.


பாடல் (ராகம் - நவரச கானடா, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment